தமிழா தலை நிமிர்...

Friday, April 3, 2009

இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேர் சிறிலங்கா கடற்படையால் கைது

தலைமன்னார் பகுதியில் இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேர் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.

சிறிலங்கா கடற்பரப்புக்குள் அத்துமீறிப் பிரவேசித்து சட்டவிரோதமான முறையில் மீன் பிடிப்பதில் ஈடுபட்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சிறிலங்கா கடற்படையின் பதில் பேச்சாளர் மகேஷ் கருணாரட்ன நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

வழமையான சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரே இவர்களைக் கைது செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேரும் ஆறு படகுகளில் சிறிலங்காவுக்குச் சொந்தமான கடற்பரப்புக்குள் அத்துமீறிப் பிரவேசித்து மீன் பிடித்துக்கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேரும் பயன்படுத்திய ஆறு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வழமையான விசாரணைகளின் பின்னர் இந்திய உயர் தூதரகத்தின் மூலமாக இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் கடற்படைப் பதில் பேச்சாளர் தெரிவித்தார்.